ரதசப்தமி(19.2.'21)


அனைவருக்கும் வணக்கம். நான் கோயில் நகரமான குடந்தையில் வசிக்கிறேன்.என் முதல் பதிவாக ரதசப்தமி பற்றிய கட்டுரையைப் பகிர்ந்து கொள்கிறேன்.

 

#ரதசப்தமி

இன்று ரதசப்தமி புண்யதினம். தை மாத அமாவாசைக்கு அடுத்த ஏழாவது நாளில் ரதசப்தமி  கொண்டாடப்படுகிறது. சூரிய பகவான் ஏழு குதிரைகள்  பூட்டிய தனது ரதத்தை வடகிழக்கு திசையில் திருப்பி பயணிப்பதாக கருதப்படுகிறது. மேலும், இந்த நாள் சூரியக் கடவுளின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்

படுகிறது.


சூரியன் தன் தென்திசைப் பயணத்தை  முடித்துக்கொண்டு ரதசப்தமியன்று வடக்கு நோக்கி பயணப்படும் தினமே ரத சப்தமி ஆகும். இது  வசந்த காலத்தின் ஆரம்பமாகவும், அறுவடை காலத்தின் தொடக்கமாகவும் உள்ளது.  விவசாயிகளுக்கு இந்த நாள் ஒரு புதிய ஆண்டின் தொடக்கமாகும். சூரியனின் தேரோட்டி அருணன். 


சூரியனின் தேரில் உள்ள ஏழு குதிரைகள் ஏழு வண்ணங்களைக் கொண்ட  வானவில்லைக் குறிப்பதாகவும், மற்றும் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது. ரதத்தில் உள்ள 12 சக்கரங்கள் பன்னிரெண்டு ராசிகளைக் குறிக்கின்றன. 


சூரியனின் சொந்த வீடாக சிம்ம ராசி உள்ளது. சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் பயணித்து திரும்பி வருவதற்கு ஒரு வருடம் ஆகிறது. ரத சப்தமி திருவிழா சூரிய கடவுளிடமிருந்து ஆற்றலையும் ஒளியையும் பெறும் விழாவாக உள்ளது.


ரத சப்தமி அன்று முதல் தென்னிந்திய பகுதிகளில் வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்வதை உணர முடியும். மேலும் இந்த நாள் வசந்த காலத்தின் ஆரம்பம்.


இந்தியாவில்  உள்ள அனைத்து சூரியக் கோயில்களிலும் ரத சப்தமி விழா விமரிசையாகக்  கொண்டாடப்படுகிறது. ஒரிசாவிலுள்ள கோனார்க் கோயில், மோதேரா சூரியன் கோயில் குஜராத், ஆந்திரா அரசவல்லியிலுள்ள  சூரியன் கோயில், தமிழ்நாட்டில் சூரியனார் கோயில் போன்றவை சூரியனுக்கான சிறப்பான கோயில்கள். ஐரோப்பா, தென் அமெரிக்கா, சீனா முதலிய நாடுகளில் சிதைந்த நிலையில் சூரியனார் கோவில்கள் உள்ளன


ரதசப்தமி புண்ய நாளில்

சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு. அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில்  7 எருக்கம் இலைகள், மஞ்சள்பொடி கலந்த அட்சதையுடன் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் தங்கள் தலைக்குமேலே வைத்துக் கொண்டு நீராடுவது  நல்லது


ரதசப்தமி விரதத்தை சூரிய உதயத்தில் செய்யவேண்டும். ரதசப்தமியன்று சுத்தமான இடத்தில்  செம்மண்ணால் பூசி, அந்த இடத் தில் சூரியரதம் வரையவேண்டும். அதில் சூரிய, சந்திரரை வரைந்து பவனி வருவதாக  நினைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உள்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரியநாராயணரை சூரிய துதிகளை சொல்லி வழிபட வேண்டும்.சர்க்கரைப்பொங்கல், உளுந்து வடை நைவேத்தியம்  செய்யவேண்டும். 


ரதசப்தமியன்று தொடங்கும் தொழில்பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்நாளில் செய்யப்படும் தானம், தருமங்களுக்கும் பலமடங்கு புண்ணியம் கிடைக்கும் எனப்படுகிறது.

இத்துடன் நான் போட்ட ரங்கோலி மற்றும் தஞ்சை மாவட்டத்திலுள்ள சூரியனார் ஆலயம்.

#ராதாபாலு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சார்தாம் யாத்ரா..14

சார்தாம் யாத்ரா..9

சார்தாம் யாத்ரா..13