குருவாயூருக்கு வாருங்கள்..11

 


செம்பை வைத்யநாத பாகவதர் நாம் அனைவரும் அறிந்த பிரபலமான பாடகர். அவர் ஒருமுறை  திருச்செங்கோட்டில்

... பாவன குருபவன புராதீச மாஸ்ரயே...என்று கச்சேரி  செய்து கொண்டிருந்தபோது திடீரென்று குரல் வெளி

வராமல் நின்றுவிட்டது. பல மருத்துவர்களிடம் காட்டியும் குணமடையவில்லை. 

அச்சமயம் அவர் குருவாயூர் சென்று கண்ணனிடம்...உன் பெயரைப் பாடும்போதுதான் என் குரல் நின்றது. அதனைத் தொடர்ந்து பாட மீண்டும் குரலைக் கொடு. என் வாழ்நாள் முழுதும் கிடைக்கும் சம்பாத்தியத்தை உன் ஆலயத்திற்கு தருகிறேன்...என மனமிறைஞ்சிக் கதற, அவரது குரல் அக்கணமே  திரும்பக் கிடைத்தது.  இறுதிவரை சொன்ன சொல்லை நிறைவேற்றினார். ஆலயத்தில் அவரது திருவுருவப்படம் இன்றும் உள்ளது. கார்த்திகை மாத குருவாயூர் ஏகாதசி சமயம் நடக்கும் பத்துநாள் உற்சவம் 'செம்பை ஏகாதசி இசைவிழா' என்ற பெயரில் நடைபெறுகிறது.

இது என்னுடைய அனுபவம். மூன்று வருடங்களுக்கு முன்பு  நன்கு பேசிக் கொண்டிருந்த என் கணவரின் குரல் திடீரென்று பேச முடியாமல் போய் விட்டது. தொண்டையில் ஏதாவது பிரச்சினை இருக்கும் என்று தொண்டைவலி மாத்திரைகளை சாப்பிட்டார். என் பெண்(டாக்டர்)ணிடம் கேட்டபோது அவளே திருச்சியில் ஒரு E.N.T.டாக்டரிடம் பேசி என் கணவரை காண்பிக்கச் சொன்னாள். அவர் சோதனை செய்து 'தொண்டையில் வலப்பக்கம் நாக்கின் கீழ்ப்பகுதி செயல்படாமல் ஒட்டிக் கொண்டிருப்பதாக சொல்லி மருந்து கொடுத்தார். 15 நாளாகியும் எந்த முன்னேற்றமுமில்லை. அவர் தினமும் பஞ்சாயதன பூஜை ருத்ரம் சமகம் எல்லாம் சொல்லி மூன்று மணி நேரம் பூஜை செய்வார்.

இதைக் கேள்விப் பட்ட சில உறவினர்களும் நண்பர்களும் 'அவருக்கு பேச்சே போய்விட்டது'...'ஆப்பரேஷன் செய்தால்தான் பேச்சு வரும்'...'என் நண்பர் இதுமாதிரி வந்து ஒவ்வொரு வார்த்தை திக்கி திக்கிதான் பேசுவார்' ‌என்றெல்லாம் பயமுறுத்த எனக்கு பயம் வந்து விட்டது. எங்கள் குல தெய்வம் மதுரவீரன், சுவாமிநாத சுவாமி, சமயபுரத்தம்மன் என்று எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டேன். 

சிகிச்சை ஒரு மாதத்துக்கு மேலாகியும் பேச முடியவில்லை. என் டாக்டர் பெண்ணும், மாப்பிள்ளையும் மும்பையின் சிறப்பான தொண்டை மருத்துவ நிபுணர்களிடம் Test Reportகளைக் காட்டியபோது

...தொண்டையில் பிரச்னை எதுவுமில்லை. Speech Therapy எடுத்துக் கொண்டு தினமும் செய்தால் குரல் மீண்டும் வர வாய்ப்புண்டு. ஆனால் எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாது.ஒரு வாரத்திலும் வரலாம். சில வருடங்களும் ஆகலாம்...என்றாராம். 

என்னால் தாங்க முடியாமல் இரவெல்லாம் அழுவேன். இனி வாழ்நாள் முழுதும் பேச மாட்டாரோ என்று பயம்.  நாங்கள் தினமும் விசாகா ஹரியின் கதைகளை YouTubeல் கேட்கும்போது ஒருநாள் குருவாயூரப்பனைப் பற்றி சொன்னபோது செம்பை வைத்யநாத பாகவதர் பற்றிய மேலே நான் எழுதியுள்ள சம்பவம் பற்றி கேட்டேன். எனக்கு சட்டென்று மனதில் ஏதோ தோன்ற, குருவாயூரப்பனிடம்..என் கணவரைப் பேச வைத்துவிடு. உன் சன்னிதிக்கு வருகிறேன்..என்று வேண்டிக் கொண்டேன்.

அடுத்தமுறை டாக்டரிடம் சென்ற போது வேறுசில டெஸ்ட்களை செய்து எல்லாம் நார்மலாக இருப்பதால் Speech Therapy ஒன்றுதான் வழி என்று சொல்லிக் கொடுத்தார். ஆரம்பத்தில் அவரால் மூச்சு பிடித்து செய்யவே முடியாமல் கஷ்டப்பட்டார். 

கிட்டத்தட்ட  ஏழு மாதங்களுக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு வர ஆரம்பித்தது. கடவுள் அருளால் பழையபடி பேச ஆரம்பித்தார். என் வேண்டுதல்

களை நிறைவேற்றினேன். குருவாயூருக்கு சென்று தரிசித்து வந்தோம். ஒருமுறை அல்ல ஏழு முறை தரிசனம் செய்தோம். வரவே மனமில்லை. 

குருவாயூரின் சிறப்புகளையும் உன்னிகிருஷ்ணனிடம் பக்தி வைத்தவர்களிடம் அவன் காட்டிய கருணைக்கும் எல்லையே இல்லை. அவனைப் பற்றி எழுத ஆரம்பித்தால் அவன் அருமையும் பெருமையும் நிறுத்த முடியாமல் தொடர்ந்து பதிவு நீளமாகி விட்டது🙏

🙏🙏ஶ்ரீக்ருஷ்ணாய துப்யம் நம:🙏🙏


ராதா பாலு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சார்தாம் யாத்ரா..14

சார்தாம் யாத்ரா..9

சார்தாம் யாத்ரா..13