தர்ம க்ஷேத்ரே குருக்ஷேத்ரம்..1

 





தர்ம க்ஷேத்ரே குருக்ஷேத்ரம்..1

ஹரே கிருஷ்ணா 🙏🏼


வரும் திங்கள் 30.8.'21 அன்று கிருஷ்ண ஜன்மாஷ்டமி. கண்ணனை நினைக்கும்போதே அவன் அழகும், விஷமங்களும், லீலைகளும் கூடவே ராதையும், பகவத்கீதையும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. கண்ணனிடம் ஆசை இல்லாதவர் எவரேனும் உண்டோ? ஸ்ரீ கிருஷ்ணன் கீதை சொன்ன குருக்ஷேத்திரம் செல்வோமா!

தர்ம க்ஷேத்ரே குருக்ஷேத்ரம்..1

தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ:।
மாமகா: பாண்டவாஸ்சைவ கிமகுர்வத ஸம்ஜய ॥

பகவத் கீதையின் முதல் ஸ்லோகம் இது. கண் பார்வையில்லாத திருதராஷ்டிரர் ஸஞ்சயனிடம் தர்ம பூமியான குருக்ஷேத்
திரத்தில் கூடியுள்ள என்னுடையவர்களும் பாண்டவர்களும் என்ன செய்தார்கள்'எனக் கேட்கிறார்.

கண்ணனை நினைக்கும்
போதே நம் நினைவில் தோன்றுவது கோகுலம், மதுரா மற்றும் குருக்ஷேத்திரம். ‘தர்ம யுத்தம்’ எனப்பட்ட மகாபாரதப் போர் நடந்த ‘தர்ம க்ஷேத்ரம்’ எனப் போற்றப்பட்ட புண்ணிய பூமி குருக்ஷேத்திரம். உலகிற்கு பக்தி, கடமை, தர்மம், ஞானம் இவற்றை எடுத்துச் சொன்ன கிருஷ்ண பரமாத்மாவின் திருவாக்கிலிருந்து உபதேசித்த பகவத் கீதை பிறந்த புண்ணிய பூமி.

இந்திய தலைநகரான டெல்லியிலிருந்து 160 கி.மீ. தொலைவில் வடக்கு திசையில் ஹரியானா மாநிலத்தில் அமைந்திருப்பதே குருக்ஷேத்திரம் என்னும் திருத்தலம். பகவத் கீதையின் பிறப்பிடமாகப் போற்றப்படும் குருக்ஷேத்திரத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எண்ணற்ற லீலைகளைப் புரிந்திருக்கிறார். பதினெட்டு நாள்கள் நீடித்த மஹாபாரதப் போர், குருக்ஷேத்திரத்தில் அரங்கேறியது.  இப்புண்ணிய பூமியை தர்மக்ஷேத்திரம் என்றும் அழைப்பதுண்டு.

இத்தலத்தை மிதித்தாலும், வசித்தாலும், இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி, இங்குள்ள ஆலயங்களில் அருளாட்சி செய்யும் கடவுளரை வணங்கினாலும், நாம் செய்த அத்தனை பாவங்களும் நசித்துப் போகும். இத்தலத்தின் பெருமை, பழமையான வேதமான ரிக் வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. தானம், தர்மம், தவம், அறம் இவற்றில் சிறந்து விளங்கியதாலேயே பகவான் கிருஷ்ணன் பாரதப் போர் நடத்த இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்தார்.

ரிக் வேதம், ஸத்பத் ப்ரம்மன், ஜாபாலி உபநிஷத், பகவத் கீதை, புராணங்கள், மகாபாரதம் போன்ற பல புனித நூல்களில் போற்றப்பட்ட இந்த குருக்ஷேத்திரம் பிறந்த தியாகக் கதையைப் பார்ப்போமா?

கவுரவ, பாண்டவர்களின் மூதாதையரில் ஒருவரான குரு மகாராஜா மகா தர்மங்களான உண்மை, பொறுமை, அன்பு, தூய்மை, தர்மம், தானம், தவம், பிரம்மசரியம் என்ற எட்டு வகை தர்மங்களும் நிலை பெற்று விளங்கும் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்க விரும்பினார். அதற்கென இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்து சிவபெருமானின் காளை வாகனத்தையும், எமதர்மனின் எருமையையும் கடனாகப் பெற்று, தனது தங்க ரதத்தை ஏராக மாற்றி உழ ஆரம்பித்தார்.

அதனைக் கண்ட இந்திரன் ‘இவ்விடத்தை எதற்கு உழுகிறாய்?’ என்று கேட்க, ‘எட்டு தர்மங்கள் நிலைபெறும் விதைகளை விதைக்கப் போகிறேன்’ என்று சொன்னார்,
மகாராஜா குரு! ‘அதற்கான விதைகள் எங்கே?’ என்று கேட்ட இந்திரனிடம், ‘அவை என் வசமே இருக்கிறது’ என்று கூறிய குருவைக் கண்டு சிரித்தபடி மறைந்து விட்டான் இந்திரன்.

மீண்டும் தொடர்ந்து குரு உழுது கொண்டேயிருக்க, மகாவிஷ்ணு அவர் முன் தோன்றி இந்திரனைப் போன்றே கேட்க, குருவும் இந்திரனிடம் சொன்னது போன்றே தன்னிடமுள்ள அஷ்ட தர்ம விதைகளை விதைக்கப் போவதாய் சொன்னார். மகாவிஷ்ணு, ‘விதைகளை என்னிடம் கொடு. நான் விதைக்கி
றேன்’ என்றார். குரு சற்றும் தயங்காமல், ‘தன் உடலே அதற்கான விதை’ என்று சொல்லி, தன் வலக்கையை நீட்ட, பகவான் தன் சக்ராயுதத்தால் அதனை ஆயிரம் கூறுகளாக்கி மண்ணில் விதைத்தார். இதே போன்று மற்ற எல்லா அவயவங்களையும் சக்கராயுதத்தால் துண்டித்து, குருவால் உழப்பட்ட 100 மைல் அளவுள்ள பூமியில் விதைத்தார். அவ்விடமே புனிதமான குருக்ஷேத்திரம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சார்தாம் யாத்ரா..14

சார்தாம் யாத்ரா..9

சார்தாம் யாத்ரா..13