பூரி ஜகந்நாதர்..5





ரத யாத்ரா சமயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை நடந்த சம்பவம் இது... அதாவது நேரடியாக சொர்க்கம் செல்ல விரும்பும் மக்கள், ரதயாத்ரா சமயம், ரதத்தின் சக்கரங்களடியில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் வழக்கம் இருந்ததாம். இதிலிருந்தே ஆங்கிலத்தில் ‘JUGGERNAUT’ என்ற சொல் உருவாயிற்று என்கிறார்கள். இதிலிருந்தே இந்த விழாவின் பழமையும் சிறப்பும் உணரப்படுகிறது.


#பூமியிலேயே வைகுண்டம்!


இந்த ஆலயத்தில் மோட்ச வைகுண்டம் என்றொரு பகுதியுள்ளது. அது பகவானுடைய சமாதி என்று அங்குள்ளவர்கள் வர்ணித்தபோது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதுபற்றி விசாரித்தோம். இங்குள்ள விக்கிரகங்கள் தாரு பிரம்மம் என்ற சிறப்பான வேப்ப மரத்தினால் ஆனவையாம்.


சிறிது காலத்தில் அவை பழுதடைந்து போய் விடும். அப்படி பழுதான விக்ரகங்களை சரி செய்வதை ‘ஸ்ரீ அங்கபீடா’ என்கின்றனர். எந்த வருடம் ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருமோ அந்த வருடத்தில் ஜகந்நாதரின் கட்டளைப்படி வேப்பமரம் தேர்வு செய்யப்படுகிறது. அந்த மரத்தை வைத்து புதிய விக்ரகங்களை விதிப்படி உருவாக்குகின்றனர். பழுதான விக்ரகங்களை இந்த மோட்ச வைகுண்டத்தில் புதைத்தும் விடுகின்றனர்.


#பூரிகோவில் அதிசயங்கள்..


*பூரி ஆலய கோபுரங்களைச் சுற்றி எந்த பறவைகளும் பறப்பதும், கோபுரத்தின் மீது  அமருவதும் இல்லை.


*இவ்வாலய கொடிமரத்தில் உள்ள கொடி காற்று வீசும் திசைக்கு நேர் எதிர் திசையில் வீசுவது புரியாத புதிராகவே இருக்கிறது.


*பூரியில் எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் கோவிலின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.


*இவ்வாலய கோபுரத்தின் நிழலானது கீழே விழுவதில்லை.


*கடற்கரையை ஒட்டி   அமைந்துள்ள  இந்த கோவிலுக்குள் நுழைந்து விட்டால், எவ்வளவு அமைதியாக இருந்தாலும் வெளியே இருக்கும் கடலின் அலை சத்தம் கொஞ்சம் கூட கேட்பதில்லை. கோவிலிலி

ருந்து வெளியே வரும்போது கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்கு கேட்கும்.


#சக்திபீடம்..

புரி ஜகந்நாதர் கோவில் வளாகத்தில் தென்மேற்கு மூலையில் ரோஹிணி குண்ட் அருகே விமலா தேவி (பிமலா தேவி) சக்தி பீட சன்னதி உள்ளது. இது ஆதி சக்தி பீடங்கள் என்றும் அழைக்கப்படும் நான்கு முக்கியமான சக்தி பீடங்களில் ஒன்றாகும். அஸ்ஸாமின் கவுஹாத்தியிலுள்ள காமாக்யா கோவில், கல்கத்தாவின் காளிகாட் காளி கோவில், ஒரிஸ்ஸாவின் 

பெர்ஹாம்பூரிலுள்ள 

தாராதாரிணி சக்தி பீடக் கோவில் மற்றும்  பூரி ஜகந்நாதர் கோவில் வளாகத்திலுள்ள 

விமலா தேவி சன்னதி ஆகியன நான்கும் ஆதி சக்தி பீடங்களாகும்.இது தேவியின் பாதங்கள் விழுந்த இடமென்று காளிகா புராணம் கூறுகிறது.


இந்தப் புகழ் பெற்ற பூரி தலத்தில் முதன்முதலில் குடியேறியவள் அன்னை விமலை. அவளுக்கு அங்கே சக்தி பீடம் அமைந்திருந்தது. இந்தத் தலத்தில் குடி கொள்ள எண்ணினார் ஸ்ரீ ஜகந்நாதர். அச்சமயம் இந்தத் தலத்தினுள் ஜகந்நாதர் வர வேண்டு

மானால், ஒரு நிபந்தனைக்கு உட்பட வேண்டும் என்றாள் விமலை. 


அதன்படி, எந்த நிவேதனப் பொருளானாலும் முதலில் விமலைக்கே நிவேதிக்க வேண்டும் என்பது வழக்கமாயிற்று. இன்றும் 

பூரிக்கு வரும் பக்தர்கள், அன்னை விமலையை வணங்கி, தங்கள் மனதிலுள்ள குறைகள்,  மன பாரம் அனைத்தும் நீங்கப் பெறுகின்றனர். 


அடுத்து, விஜயா என்னும் அம்மன் சன்னதியும் உள்ளது. லலிதா சஹஸ்ரநாமத்தில் 'விஜயா விமலா வந்த்யா வந்தாரு ஜனவத்சலா' என்பதற்கேற்ப இருவரும் அருகில் இருந்து அருளை வழங்கும் அருமையான திருக்கோயில்.


*ஆதி சங்கரர் நிறுவிய நான்கு பீடங்களில் ஒன்றான 

கோவர்தன பீடம் பூரியில் 

அமைந்துள்ளது.


#சூப்பர்சுற்றுலா செல்லலாம்

வருடா வருடம் ஜூன்,ஜூலையில் ‘ரத்யாத்ரா’ திருவிழா மிகச் சிறப்பாக பூரியில் நடைபெறுகிறது. வாழ்வில் ஒரு முறையாவது நாம் கண்டுகளித்து புண்ணியம் பெற வேண்டிய திருவிழா இது. மேலும் பார்த்து ரசிக்க அருகிலேயே புவனேசுவர் ஆலயம், கொனாரக் சூரியன் கோவில், நந்தன் கானன் மிருகக் காட்சி சாலை என்று கலையழகும் இயற்கை அழகும் நிரம்பிய பல இடங்களும் கூடுதல் போனஸாக இருக்கின்றன!


இதுவரை நான் எழுதிய கட்டுரையை படித்து, பிடித்து, பாராட்டிய அனைவருக்கும் நன்றி 🙏🏼

முற்றும்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

WTWFriendship

சார்தாம் யாத்ரா..14

சார்தாம் யாத்ரா..9